Wednesday, April 6, 2011

உலக முள்வேலிக் கோப்பை : இறுதிப்போட்டி !!!



தினம் தினம் புதைந்துக் கொண்டிருக்கிறோம் 
முள்வேலிகளுக்குள் ,
கோப்பையும் . குதூகலமுமாய் 
உங்கள் மைதானம் . . . !!!!






கம்பிகள் மறைத்தது போக
மீதம் தெரியும் 
இடைவெளிகளின் வழியே,
நேர்க்கோட்டில்
விரிகிறது எங்கள் உலகம் . . . !!!



நீங்கள் அடிக்கும் பந்துகள் கூட 
கட்டிடங்களை கடந்துச் செல்கின்றன,
இவ் இரும்பு கோடுகளை 
சற்றே தாண்டி கூட சென்றது இல்லை
எம் கரங்கள் . . .  !!!


விசிலும் ஆராவாரமுமாய் . . . 
உம் ஆட்டங்கள் ,
வீழ்ந்துப்போன வாழ்க்கையினை, 
கற்பனை செய்துக் கொள்கிறோம்
எம் பழமை நினைவுகளில் . . . !!!


உடலெங்கும் கொடியின்
வர்ணம் பூசி கொண்டாடுகிறது உலகம் ,
அவர்கள் ஏற்படுத்திய
எங்கள் நிர்வாணங்களை மறந்து விட்டு . . . !!!


விடை கிடைக்காமல் நசுங்கிப் போய்கிடக்கிறோம் ,
எங்கள் வலிக்காக போராடிய 
அண்ணன்களும் ,
அரக்கனின் வருகையையொட்டி
சிறையில் . . . !!!


இரண்டாண்டாகியும்
இன்னமும் வரவில்லை, 
கடைவீதிக்கு சென்ற 
தம்பியும் , தமக்கையும் . . . !!!


பால் கிடைக்காமல் 
இறந்துப் போன கடைசித் தம்பியின்
முதலாம் ஆண்டு நினைவும்
சில தினங்களில் . . . !!!


அப்பா
ஊருக்கு போயிருப்பதாய்
பல ஆண்டுகளாக
தினம் இரவினில் 
எங்களுக்கு ஆறுதல் சொல்லி 
உணவு ஊட்டும் அம்மா.....
கண்டதுண்டு ,
ஆமிக்காரன் அடிக்கும்
பாட்டரி வெளிச்சங்களில்.
அவளின் கண்ணீர் நனைத்த விழிகளையும் ,
துடைத்து நசிந்த
முந்தானையையும்.


யார் சொன்னது உங்களுக்கு இதயமில்லை , 
இரக்கமில்லையென்று ???!!


இதோ தயாராகிவிட்டீர்கள்
நிரப்பப்பட்ட
கோலா பாட்டில்களுடன்
ஐ.பி.எல். காக . . . 
எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதை மறக்க 
ஏதேனும் ஒரு போதை தேவையாயிற்றே
உங்களுக்கு. . . இப்படியாக நினைத்துக் கொள்கிறோம் !!!


எங்களைப் பற்றிய கவலைகள் உங்களுக்கெதுக்கு ??!
இதோ.....
உணர்வுடன் கத்த துவங்கிவிட்டனர்
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் ,

காலியான உணவுக் கோப்பைகளுடன்
உணவின்றி கிடக்கிறோம் ,

கோப்பை வாங்க தயாராக நீங்கள் . . . !!!


~ எழிலன் ~

No comments:

Post a Comment